Sunday, November 7, 2010

நான் யார்?

  • அணுகுவதற்கு இலகுவாய் இருப்பது எளிமைக்கு முதல்படி என நினைப்பவன்.
  • பழையதன்றி, புதியன உயிர்ப்பதில்லை என்பதில் நம்பிக்கை கொண்டவன்.
  • பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் எனும் அக்கப்போரில் நாட்டமற்றவன்.
  • தமிழில் நாட்டம் கொண்டவன். தமிழ் எழுத்துகள் கொண்டு, தமிழ்ச் சொற்களை எழுத முனைபவன்.
  • சுட்டுவதில் தன்னைச் சுட்டுவதற்கான காரணிகளும் உயிர்க்கிறது என்பதில் ஒப்புமை கொண்டவன்.
  • அறம் கட்டுடைக்கப்படும் போது, நீட்சிகள் எங்கோ, எதோ ஒரு புள்ளியில் கேட்டுக்கு வழி வகுக்கும் என்பதில் இசைந்தவன்.
  • ஒரு சூழலில் பெண்பால் உயர்வானது; பிறிதானதொரு சூழலில் ஆண்பால் உயர்வானது என்பதில் பற்றுடையவன். த்த்தம் தனித்தன்மையை அவை இரண்டும் கொண்டிருக்கின்றன என நம்புபவன்.
  • ஒட்டு மொத்த சமத்துவம் சாத்தியக் கூறுகள் அற்றது; பிரிந்த மணிகள் மாலையாகுமே தவிர, மாலையே மணியாவது இல என்பதில் உறுதி உடையவன்.
  • இணக்கமும் தனித்துவமும் வேறு வேறானவை. அதே வேளையில், அவை இரண்டும் உடலும் உயிரும் போன்றவை என ஏற்றுக்கொண்டவன்.
  • தமிழ் மொழி, பண்பாடு பேணுபவன் எவராயினும் அவர் தமிழர் என்பதில் பற்றுக் கொண்டவன்.
  • சாதிக் கணக்கெடுப்பில் உடன்பாடற்றவன்.
  • இட ஒதுக்கீடு என்பது படிப்படியாக இல்லாதிருத்தல் வேண்டும் என எண்ணுபவன்.
  • விவாதம் என்பது வினவுதலும் விடையளித்தலுமே அன்றி, வெட்டிப் பேசுதல் அன்று என எண்ணுபவன்.

8 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் எனும் அக்கப்போரில் நாட்டமற்றவன்.//


பார்ப்பனீயம் ஒழிந்தாலே விமோச்சனம்தான் ..

அதற்கு துணிவு மட்டுமல்ல , நம்மீது விழும் சகதிகளை தாங்கிக்கொள்ளும் சக்தியும் வேணும்..:)

மற்றபடி , சமூகத்தின் மீது அக்கறையற்றவர்களும் , பயமுள்ளவர்களும் மெளனியாக இருப்பதில் ஆட்சேபனையில்லை..:)


நன்று ..


----------

பார்ப்பனீயம் என்றால் என்ன?


http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post.html

பார்ப்பனீயம் என்பது ஜாதி சார்ந்த ஒரு தத்துவமல்ல. பொதுவாக தாம் மற்றவரை காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொள்வதுதான் எனனைப் பொறுத்தவரை பார்ப்பனீயம். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்று எண்ணுவது சுயமரியாதை. தன்னைவிட தாழ்ந்தவர் யாருமில்லை என கருதுவது மனிதாபிமானம். இதில் தங்களை விட உயர்ந்தவர் யாருமில்லை ஆனால் மற்றவர் எல்லாரும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதுதான் பார்ப்பனீயம். முற்காலத்தில் பார்ப்பனர் என்ற சாதியினரிடம் இந்த ஆதிக்க எண்ணம் மேலோங்கியிருந்தமையால் என்பதாலேயே இந்த ஆதிக்க எண்ணம் பார்ப்பனீயம் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சுட்டுவதில் தன்னைச் சுட்டுவதற்கான காரணிகளும் உயிர்க்கிறது என்பதில் ஒப்புமை கொண்டவன்.//

அருமை

Unknown said...

இந்த பதிவு பழமைபேசியுடையது தானா?

//அகத்திணையில் பெண்பால் உயர்வானது; புறத்திணையில் ஆண்பால் உயர்வானது என்பதில் பற்றுடையவன்.//
இந்த கருத்து, பார்ப்பனீயம், சாதீயம், ஏற்றத் தாழ்வு பற்றிய உங்கள் மற்ற கருத்துக்களிடம் இருந்து மாறுபட்டு தெரிகிறது:-((((((((((((((((((

வருண் said...

எனக்கெல்லாம் நான் யார்னு இவ்ளோ தெளிவா சொல்லத் தெரியாதுங்க! இது பொய் மாதிரி தெரிகிற உண்மை! :)

பழமைபேசி said...

@@கெக்கே பிக்குணி

இன்னும் சற்றுத் துல்லியமாகவும் சரியாகவும் சொற்களைப் போடணும்... கிட்டத்தட்ட எதோ ஒரு சூழ்நிலையில் ஒருவர் உயர்ந்தவராகவும் ஒருவர் உயர்வற்றவராகவும் அமைய நேரிடுகிறது... விடுப்புக்குப் பின்னர் வந்து சரியான சொற்களைப் போட்டு விடுகிறேன்.

பழமைபேசி said...

இவ்விடுகைக்கான காரணி!

எண்ணங்கள் 13189034291840215795 said...

பாகும், பருப்பும், தெளிதேனும் கலந்து உண்பதை விடுத்து, உவப்பும் எழுச்சியும்
தெம்பும் சமச்சீராய்க் கலந்து அதை தமிழ்ச் சோற்றில் இரண்டறக் கலந்து மெய்யுள்
பாய்ச்சி எழுந்தது தமிழர் கூட்டம்.

இச்சார்ல்சுடன்(Charleston, SC). ஏஃசுலி ஆறும் கூப்பர் ஆறும் அட்லாண்டிக்
பெருங்கடல் நோக்கிப் பாய, அவற்றுக்கு இடையில் அமைந்த தீபகற்பமாக எழிலுற
அமைந்ததுதான் பசுமைநிறை இச்சார்ல்சுடன் பெருநகரம். கூப்பர் ஆற்றைக் கடக்கையில்,
பிரம்மாண்டமான கட்டமைப்புக் கொண்ட ஆர்த்தூர் ரேவனெல் பாலம் நம்மை மறுகரைக்குக்
கொண்டு சேர்க்கிறது. //


என்னைப்போன்றவர்களுக்கு கடினம்தான் ..

தமிழார்வம் உண்டுதான்..

செந்தமிழ் ஆர்வம்?....ம்ஹூம்..:)

G.M Balasubramaniam said...

பின்னோக்கிப் பதிவுகள் படிக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக அல்ல. ஒன்றன் முன் ஒன்றாக. நான் யார் என்று கேள்வி எழும்போதே சில தெளிவின்மைகள் தெரியும்/தெரிகிறது. எதை சிந்திப்பதானாலும் விருப்பு வெறுப்பின்றி அணுக வேண்டும். விருப்பினால் குறையும், வெறுப்பினால் குணமும் தோன்றாக்கெடும். மொழியில் ஆர்வம் தேவை. வெறி கூடாது. ஏற்ற தாழ்வுகளுக்கு நம் கலாச்சாரப் பண்பாடுகளே முதன்மைக் காரணம். ( ஒரே காரணம் என்று சொல்ல மாட்டேன். )SURVIVAL OF THE FITTEST-ம் ஒரு காரணம்.இன்றைக்கும் சாதி வித்தியாசம் என்று பேசுபவர்களே அது தொடரவும் அழியாமல் இருக்கவும் தெரிந்தோ தெரியாமலோ போராடுகிறார்கள்.

Post a Comment